திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
பிற்சேர்க்கை 1. திருவிடைவாய் (இப்பதிகம் 1917-ல் திருவிடைவாய்க் கல்வெட்டினின்று எடுக்கப்பட்டது)
|
மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்
பொறிவாய் வரிவண்டுதன் பூம்பெடை புல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.
|
1 |
ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச்
செவ்வான்மதி வைத்தவர் சேர்விட மென்பர்
எவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது
வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே.
|
2 |
கரையார்கடல் நஞ்சமு துண்டவர் கங்கைத்
திரையார்சடைத் தீவண்ணர் சேர்விட மென்பர்
குரையார்மணி யுங்குளிர் சந்தமுங் கொண்டு
விரையார் புனல்வந் திழியும் விடைவாயே.
|
3 |
கூசத் தழல்போல் விழியா வருகூற்றைப்
பாசத் தொடும்வீழ உதைத்தவர் பற்றாம்
வாசக் கதிர்ச்சாலி வெண்சா மரையேபோல்
வீசக் களியன்னம் மல்கும் விடைவாயே.
|
4 |
திரிபுரம் மூன்றையுஞ் செந்தழல் உண்ண
எரியம்பு எய்தகுன்ற வில்லிஇட மென்பர்
கிரியுந் தருமாளிகைச் சூளிகை தன்மேல்
விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே.
|
5 |
கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத்
தள்ளித் தலைதக்கனைக் கொண்டவர் சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்
வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே.
|
6 |
பாதத் தொலி பாரிடம் பாடநடஞ்செய்
நாதத் தொலியர் நவிலும் இடமென்பர்
கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே.
|
7 |
எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப்
பண்ணார் தருபாடல் உகந்தவர் தோறும்
கண்ணார் விழவிற் கடிவீதிகள் தோறும்
விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே.
|
8 |
புள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்
ஒள்வான் நிலந்தேடும் ஒருவர்க் கிடமாந்
தெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்
விள்வாய் நறவுண்டு வண்டார் விடைவாயே.
|
9 |
உடையேது மிலார் துவராடை யுடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்
அடையார் புரம்வேவ மூவர்க் கருள்செய்த
விடையார் கொடியான் அழகார் விடைவாயே.
|
10 |
ஆறும் மதியும்பொதி வேணியன் ஊராம்
மாறில் பெருஞ்செல்வம் மலிவிடை வாயை
நாறும் பொழிற்காழியர் ஞானசம் பந்தன்
கூறந் தமிழ்வல்லவர் குற்றமற் றோரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |